பிரச்னைகளைச் சமாளிப்பதில்தான் வெற்றியாளர் களின் திறன் ஒளிந்திருக்கிறது. பிரச்னைகள் வரும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
1. பொதுவாக நெருக்கடி வரும்போது உணர்ச்சி வசப்படக் கூடாது. பதற்றமடைந்தால் நம்மால் புத்திசாலித்தனமாக யோசிக்க முடியாது.
2. நெருக்கடிகளைச் சமாளிக்கும் பொறுப்பு அந்த நிறுவனத்தின் தலைவருக்குத்தான் அதிகம் உள்ளது. தலைவர்கள்தான் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து பிரச்னையைச் சமாளிக்க வேண்டும். விரைவில் சரி செய்யப்படும் என்ற ஊக்கத்தையும் கொடுக்க வேண்டும்.
3. நெருக்கடி நேரத்தில் என்ன பிரச்னை, யார் காரணம் என்பது பற்றி தெளிவாகச் சொல்லிவிடுவது நல்லது.
4. பிரச்னை உருவான அடுத்த நிமிடமே அது பற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்துவது நல்லது. கப்பல் மூழ்கும் சமயத்தில் சொல்வதை யாரும் ஏற்க மாட்டார்கள்.
5. நெருக்கடியின் போது நம்மிடம் இருக்கும் மனித வளம், பணம் போன்ற வளங்களை சரியாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
6. குறுகிய காலத்துக்கு பிரச்னையை சரிசெய்தால் போதும் என்று நினைக்காமல் நீண்ட காலத்துக்கான தீர்வாக இருப்பது நல்லது. இதனால் நிறுவனத்துக்கு கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டாலும் இமேஜ் அதிகரிக்கும்.
7. நெருக்கடி காலங்களில் கட்டாயம் செய்யக் கூடாதது, தகவல்களைத் தடுப்பது. நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அனைவரிடத்திலும் வெளிப்படையாக இருப்பதன் மூலம் நல்லாதரவைப் பெறமுடியும்.
8. எவ்வளவு சிறிய பிரச்னையானாலும் அதை மேலாளரிடமோ அல்லது ஊழியர்களிடமோ ஒப்படைத்து விட்டு கண்டுகொள்ளாமல் இருப்பது கூடவே கூடாது. நீங்கள் களத்தில் இறங்கி சரி செய்ய வேண்டும்.
9. அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி, விற்பனை வரி போன்றவற்றைச் செலுத்தாமல் இருப்பதால் ஏற்படும் நெருக்கடிகளுக்குக் காரணம், அந்த நிர்வாகம்தான். அது மாதிரியான பிரச்னைகள் ஏற்படாதவாறு அந்த நிறுவனம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
10. எந்தச் சூழலிலும் தொழில் நேர்மையில் சமரசம் கூடாது. நியாயமற்ற முறைகளில் தொழில் நடத்தும் போது அதற்குரிய பிரச்னைகளை தினசரி சந்தித்துதான் ஆகவேண்டும்'' என்றார் ஸ்ரீராம்.