Search This Blog

Monday, September 13, 2010

Innovate and never ever stop Innovating!

Innovate - இந்த வார்த்தைக்கு 'எதையேனும் புதிதாகக் கண்டுபிடிப்பது அல்லது

அறிமுகப்படுத்துவது' என்று அர்த்தம் சொல்கிறது அகராதி. அர்த்தம் ஐந்து வார்த்தைகளுள் அடங்கிவிட்டது. ஆனால், அதன் நீள அகல விஸ்தீரணம் எந்தக் கற்பனை எல்லைகளிலும் அடங்காதது.

தேவைதான் கண்டுபிடிப்பின் தாய். ஆர்வம் உந்தும் அறிமுகங் கள்தான் இந்த உலகத்தைச் செலுத்திக்கொண்டே வந்திருக்கின் றன. சிக்கிமுக்கி தீப்பொறி எண் ணங்கள்தான் ஐ-பேட் யுகம் வரை அசாத்தியங்களைச் சாத்தியப்படுத்தி வருகின்றன. 'மாஸ்டர் மைண்ட்' நபர்களிடம்தான் அது எழும் என்று ஏதும் இல்லை. அப்படியாக சிந்திக்கப் பழகியவர்களைப் பின்னர் உலகம் 'மாஸ்டர் மைண்ட்' என்று கொண்டாடும். உங்களுக்கும் 'மாஸ்டர் மைண்ட்' ஆக ஆசையா? சிந்திப்பதற்கு எந்தத் தடையும் வைத்துக்கொள்ளாதீர்கள் என் கிறார் மருத்துவர் ரேகா ஷெட்டி. 'Innovate' என்ற புத்தகத்தில் வணிக உலகத்தில் நிகழ்ந்த அபார ஆச்சர்ய மாற்றங்களை அடுக்கிக்கொண்டே செல்கிறார். அதில் இருந்து சில துளிகள்...

நீங்கள் எதுபற்றிப் பேசுவதாக இருந்தாலும் அல்லது, ஒரு விஷயத்தைப்பற்றி விளக்குவதாக இருந்தாலும், அதற்கு ஒரு தலைப்பு கொடுத்துப் பேசத் துவங்குங்கள். செய்தித்தாள், வார இதழ்களில் பளீர் சுளீர் என ஒரு தலைப்பு கொடுப்பார்களே... அதுபோல!

இப்படிச் செய்வது ஓர் ஆர்வத்தைத் தூண்டுவது ஒருபுறம், தக்க தலைப்பு தேர்ந்தெடுப்பதற்காக அந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் அலசி ஆராய்வது உங்களுக்கே புதுப் புது எண்ணங்களை உருவாக்கும்!

வீடோ, பள்ளி - கல்லூரியோ, அலுவலகமோ நாம் ஒரு விஷயத்தை நோக்கி முனைந்தால், அந்த விஷயத்தோடு சம்பந் தப்பட்ட அனைவரையும் நம்மோடு இணைத்துப் பிணைத்துக் கொள்ள வேண்டும். 2008-ம் வருடத்தில் 456 கிளைகளைத் துவக்க வேண்டும் என்று ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி திட்டமிட்டுச் செயல்படுத்தியபோதும், உலகின் மிக விலை குறைவான கார் தயாரிக்க வேண்டும் என்று முனைந்து, டாடா நானோவை உருவாக்கியபோதும், உலகின் மிக மெல்லிய கடிகாரத்தை வடி வமைக்க வேண்டும் என்று டைட்டன் சாதித்தபோதும் அந்த புராஜெக்ட் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் அடைய வேண்டிய இலக்கு குறித்த தெளிவான அறிவுறுத்தல் இருந்தது!

குழந்தைகள் உணவு தயாரிக்கும் நிறுவனம் எடுத்த சர்வே அது. பெரும்பாலான பெற்றோர்களின் கவலை, 'என் குழந் தைக்கு முட்டையே பிடிக்கவில்லை. என் குழந்தையின் காலை உணவில் முட்டையைச் சேர்த்துக்கொள்ள என்ன செய்வது?' என்பதுதான். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணக் கூட்டப்பட்டு இருந்த விவாதத்தில் 'முட்டையை எப்படி குழந்தைக்குப் பிடிக்கும் வகையில் பரிமாறுவது?' என்று துவங்கி, பலப் பல திருப்பங்களுக்குப் பிறகு, 'குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் சத்தான காலை உணவு தயாரிப்பது எப்படி?' என்ற நிறுத்தத் துக்கு வந்தது. அதன் பிறகுதான் வித்தியாச சுவைகளில், கலவையான சத்து விகிதங்களில் குழந்தைகள் உணவு வகைகள் மார்க்கெட்டில் நுழைந்து கோடிகளில் மார்க்கெட்டைப் பிடித்தன!

'ஃபேமிலி டாக்டர், ஃபேமிலி வக்கீல் என்று இருக்கும்போது 'ஃபேமிலி பேங்கர்' என்று ஒருவர் ஏன் இருக்கக் கூடாது? என்று யோசித்தோம். அதற்கென முயற்சித்தோம். இப்போது வாடிக்கையாளர்களாக எங்கள் அலுவலகம் வருபவர்கள் உறவினர்களாக எங்க ளிடம் விடைபெறுகிறார்கள்!' என்கிறார் ஆஷா. டச் வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். ஆஷா வின் தலைமையில் செயல்படும் குழுவின் ஒவ்வோர் அங்கத்தினரும் ஐந்து கோடி ரூபாய்களுக்குக் குறையா மல் பரிவர்த்தனைகள் மேற்கொள்கிறார்கள். 'ஃபேமிலி பேங்கர் என்று யோசித்ததோடு நில்லாமல், அதை முழு மனதோடு செயல்படுத்தினோம். எங்கள் வாடிக்கையாளர் இல்லத்தின் எந்த நல்லது, கெட்டதும் நாங்கள் இல்லா மல் நடந்ததே இல்லை. அன்று ஒட்டுமொத்த வங்கிக்கும் விடுமுறை தேவைப்பட்டால்கூட, தயங்காமல் அளித்து விடுவோம்!' என்கிறார் ஆஷா.

மாருதி சுஸுகி நிறுவனம் தான் தயாரிக்கும் கார் களின் எடையைக் குறைக்க முடிவெடுத்தது. கிட்டத்தட்ட 2,500 உதிரி பாகங்கள்கொண்டு தயாரிக்கப்படும் காரின் எடையை அசெம்ப்ளிங் யூனிட் மட்டும் நினைத்தால் குறைக்க முடியாது. அதே சமயம், எல்லா உதிரி பாகங்களின் எடையைச் சகட்டுமேனிக்கும் குறைக்க முடியாது. அப்படிக் குறைத்தால் காரின் பெர்ஃபார்மன்ஸ் சீர்குலைந்துவிடும். பிரச்னைக்குத் தீர்வு தேடி முட்டி மோதிக்கொண்டு இருந்தபோது, ஒருவர் மூளையில் பல்ப். '2,500 உதிரி பாகத் தயாரிப்பாளர்களிடமும் அவரவர்கள் தயாரித்து அனுப்பும் பாகங்களில் ஒரே ஒரு கிராம் எடையைக் குறைத்துத் தயாரிக்கச் சொன்னால் என்ன?' சொன்னார்கள். காரின் எடையில் 2.6 கிலோ எடை குறைந்தது, பெர்ஃபார்மன்ஸும் மைலேஜும் அதிகரித்தது. அந்த 'ஒரு கிராம்' சிந்தனைதான் இன்னோவேஷன்!

அப்போலோ மருத்துவமனைகள் இந்தியாவில் பரவலாகச் செயல்படத் துவங்கிய ஆரம்ப காலகட்டத் தில், மிகப் பெரிய எதிர்ப்பினை எதிர்கொண்டது. 'நீங்கள் நோயாளியா? எங்களிடம் வாருங்கள்... நாங் கள் உங்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கிறோம்' என்று விளம்பரப்படுத்த முடியாது. 'ஆம்... நான் நோயாளி' என்று யார் தானாகவே முன்வந்து ஒப்புக்கொள்வார்கள். அதிலும் இந்தியர்களின் மனப்போக்கு இந்த விஷயத்தில் உலகப் பிரசித்தம். 'நான் மரணமற்றவன். என்னைச் சுற்றி இருப்பவர்களுக்குத்தான் மரணம் நிகழும். நான் சஞ்சீவி!' என்ற மனநிலையுடனேயே வளைய வருபவர் களிடம் எந்தப் பருப்பும் வேகாது என்று அவநம்பிக்கைக் குரல்கள்தான் எழுந்தன. 'மாத்தி யோசி' தத்துவம்தான் அப்போது அப்போலோவின் துணைக்கு வந்தது. 'நோயாளிகள்தான் மருத்துவமனைக்குச் செல்வார்கள்' என்பது பொதுவிதி. 'தன் ஆயுள் முழுக்க நடை உடை யுடன் ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள், அப் போலோ மருத்துவமனை வளாகத்தில் மகிழ்ச்சியுடன் உலவுவார்கள் என்பது புது விதி' என்று விளம்பரப்படுத்தினார்கள். இப்போது அப்போலோ எப்போதும் ஹாஸ்பிட்டல் ஃபுல்!

இதில் சில சங்கதிகள் மிக அந்நியமாக, அமல்படுத்த சாத்தியமற்றதாகத் தோன்றுபவர்களுக்கு மட்டும் ஒரு பின்குறிப்பு:

'நிலவில் மனிதன் காலடி எடுத்துவைக்க முடியும்' என்று தோன்றிய முதல் சிந்தனைப் பொறியை நினைத்துக்கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment