Search This Blog

Wednesday, November 17, 2010

மறந்துபோன வாசிப்பை மீட்டு எடுப்பது எப்படி?

ந.வினோத்குமார், படங்கள்:அ.ரஞ்சித்

ஒரு கேள்வி. சமீபத்தில் என்ன புத்தகம் படித்தீர்கள்? நம்மில் பலர் பதில் இல்லாமல்

தடுமாறுவோம். ஏன் இந்தத் தடுமாற்றம்? சமீபத்தில் பார்த்த படம்பற்றி சிலாகிக்க முடிகிறது. 'சச்சின் அந்த பாலை அப்படி ஆடியிருக்கக் கூடாது' என்று விமர்சனம் செய்ய நேரம் இருக்கிறது. பெண்களைப் பற்றியோ, ஆண்களைப்பற்றியோ பேசுவதற்கு நாள் முழுக்க நேரம் இருக்கிறது. இப்படிப் பலவற்றை விவாதிக்கும் நாம், இதுவரை வாசித்த புத்தகங்கள்பற்றி எத்தனை பேரிடம் பேசி இருக்கிறோம்.

'ஒரு மனிதன் எத்தனை புத்தகங்களைப் படித்தான் என்பதை வைத்துத்தான் அவன் வாழ்ந்த நாட்கள் கணக்கிடப்படும்' என்கிறார் ஹென்ரி டேவிட் தாரோ. வாசிப்பின் மூலம் பல சாதனைகள் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. புத்தக வாசிப்பால் உயர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். வாசிப்பு என்பது பல நன்மைகளைத் தந்துகொண்டு இருக்க... அதைக் கொண்டாட வேண்டிய இளைஞர்கள், அதைவிட்டுத் தூர விலகி நிற்பது ஏன்? மறந்துபோன வாசிப்பை மீட்டு எடுப்பது எப்படி? வழி சொல்கிறார்கள் கருத்தாளர்கள்...

"இளைஞர்கள் புத்தகம் படிப்பது இல்லை என்பது முழுமையான கருத்து அல்ல; அவர்கள் தேர்வு செய்து படிக்கிறார்கள். அதிலும் குறைவாகப் படிக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்" என்று மாறுபட்ட பார்வையுடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். உரைநடையில் கவிதையின் மென்தன்மையை உணரச் செய்யும் படைப்பாளி. "முந்தைய தலைமுறையில் ஒரு தகவல் தேவை என்றால், அதை நூலகத்தில் சென்று தேடுவோம். ஆனால், இன்றைய தலைமுறையில் நூலகத்தின் இன்னொரு வடிவமாக இணையம் இருக்கிறது. அதனால், புத்தகத்தைத் தேடிப் போகும் அந்தத் தேடுதல் இன்று இளைஞர்களிடம் இல்லை.

இதற்கு முந்தைய தலைமுறையில் சிறு வயதில் இருந்தே இலக்கியத்திலோ, இசை யிலோ அல்லது வேறு ஏதேனும் கலைகளிலோ ரசனையை ஏற்படுத்தி, வீடு நம்மை வளர்த்தது. ஆனால், இன்று அந்த நிலை இல்லை. பாடப் புத்தகங்கள் தவிர, வேறு எதுவும் படிக்கத் தேவை இல்லை என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. 'புத்தகம் படிப்பதால் பயன் ஒன்றும் இல்லை' என்கிறார்கள் பலர். அது தவறு. எல்லாப் புத்தகங்களும் அதனதற்கான பயனை உடையது தான். நமக்குத்தான் புத்தகங்களைப் பயன்படுத்தத் தெரிவது இல்லை. என்ன புத்தகங்கள் படிக்கிறீர்கள் என்பதைவிட, எதற்காகப் புத்தகம் படிக்கிறீர்கள் என்பதும் முக்கியம். பலருக்கு 10 பக்கங்கள் படித்தால், அடுத்த சில நிமிடங்களில் படிக்கிற ஆர்வமே வடிந்து விடுகிறது. மேம்போக்காகப் படிக்காமல் ஆழ்ந்து படிக்க வேண்டும். வாசிப்பை அதிகப் படுத்திக்கொள்ள எளிய வழிகள் இருக்கின்றன.

ஒரு மாதத்துக்கு நான்கு புத்தகங்கள் என்று படித்தால்கூட, வருடத்தில் 50 புத்தகங்கள் படித்துவிடலாம். அடுத்த வருடம் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும். இந்தப் புத்தகங்களை நீங்களே போய் வாங்கிப் படிக்க வேண்டும். படிப்பதோடு நின்றுவிடாமல், படித்த புத்தகத்தைப்பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும். சராசரி வாசகர்கள் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவது இல்லை. ஏனென்றால், எல்லாப் புத்தகங்களும் இணையத் தில் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. மேலும், கைகளில் புத்தகங்களைப் புரட்டி, ஒவ்வொரு எழுத்தாக வாசித்து, அதன் மணத்தைச் சுவாசித்து என புத்தகத்துடனான உறவு தரும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை.

ஹெலன் கெல்லரின் 'என் கதை', பிரெஞ்சு எழுத்தாளர் அந்த்வான்த் செந்த் எக்சுபெரி எழுதிய 'குட்டி இளவரசன்', டொமினிக் லேப்பியர் எழுதிய 'நள்ளிரவில் சுதந்திரம்', வெ.ஆனைமுத்து தொகுத்த 'பெரியார் சிந்தனைகள்', புதுமைப்பித்தன் கதைகள் ஆகிய நூல்களைத் தீவிரப் புத்தக வாசிப்பாளர்கள் அனைவரும் கட்டாயமாகப் படிக்க வேண்டும். இந்தப் புத்தகங்கள் உங்களின் வாழ்க்கை மீதான பார்வையை மாற்றும். இவை தவிர, அனைவரும் தமிழ் அகராதியை வைத்திருக்க வேண்டும். சிங்கப்பூரில் புத்தகம் படிக்கும் மாதம் என்ற ஒன்றை அறிவிக்கிறார்கள். ஆஸ்திரேலியா வில் மதிய உணவு இடைவேளைகளில் 'புத்தக வாசிப்பு நேரம்' என ஒன்றை அலுவலகங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் கடைப்பிடிக்கிறார்கள். அமெரிக்கா வில் வருடம் தோறும் 10 சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து, அதை இலவசமாக மக்களிடம் கொடுக்கிறார்கள்.

நம் நாட்டில், அப்படியான விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவு. படிப்பதற்கான இடங்களே இங்கு இல்லை. பூங்காக்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் புத்தகம் படிப்பதற்காகத் தனியே ஓர் இடத்தை ஏற்படுத்த வேண்டும். புதிதாக வந்திருக்கிற நூல்களை நூலகங்களே அறிமுகப்படுத்த வேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு, 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் புத்தகங்கள் படிப்பது இல்லை என்று கூறுகிறது. இது கவலைக்குரிய விஷயம்" என்று நதியின் நீரோட்டமாக வாசிப்பின் அவசியம் உணர்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

"படிக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடத்தில் இல்லை என்று முற்றிலுமாக மறுத்துவிட முடியாது. முன்பைவிட வெகுஜனப் பத்திரிகைகளை வாசகர்கள் அதிகமாகப் படிக்கிறார்கள். ஆனால், தீவிர வாசிப்பு என்பது அவ்வளவாக இல்லை" என்று தொடங்குகிறார் கவிஞர் மாலதி மைத்ரி.

"வெகுஜனப் பத்திரிகைகள்தான் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஆனால், அந்த ஊடகமே சினிமாவின் பின்னால்தான் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அதைக் குறைத்துக்கொண்டு வாசிப்பை மீட்டெடுக்கும் வகையில், நல்ல பகுதிகளைக் கொண்டு வருவது வெகுஜனப் பத்திரிகைகளின் கடமை. அதேபோல கல்விக் கூடங்கள், அதிலும் ஆரம்ப நிலைக் கல்விக் கூடங்களில் நூலகம் என்பது மிக ஏழ்மையான நிலையில் இருக்கிறது. முன்பெல்லாம், நூலக வாசிப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் பள்ளிகளில் 'லைப்ரரி பீரியட்' என்று வைத்திருப்பார்கள். இன்று எந்தப் பள்ளியில் அது இருக்கிறது? இன்னும் பல பள்ளிகளில் நூலகத்தைப் பூட்டிவைத்து இருக்கிறார்கள். காரணம், மாணவர்கள் கிழித்துவிடுவார்களாம். ஒரு புத்தகத்தை எப்படிக் கவனமாகக் கையாள வேண்டும் என்று கற்றுத்தருவதும்கூட நூலக ஆசிரியர்களின் கடமை அல்லவா?

வீடுகள் இன்னொரு முக்கியமான காரணம். கதைப் புத்தகங்கள் படித்தால் கெட்டுப் போய்விடுவான் என்ற மூடநம்பிக்கை இன்னும் பல குடும்பங்களில் நிலவுகிறது. மாணவர்களும் தங்கள் மேல் எது திணிக்கப் படுகிறதோ, அதுதான் சரியானது என்று கருதுகிறார்கள். அப்படி இல்லாமல், தங்க ளுக்கு எது சரி என்பதைத் தெரிந்துகொண்டு தேர்வு செய்து படிக்க வேண்டும். பாலின சமத்துவத்தைக்கூட வாசிப்பு மட்டுமே வழங்க முடியும்.

என்னுடைய அனுபவத்தில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 'விலங்குப் பண்ணை', பாரதியார் கவிதைகள், காந்தியின் 'சத்திய சோதனை', 'பெரியாரின் வாழ்க்கை வரலாறு', சிவகாமி எழுதிய 'ஆனந்தாயி' ஆகிய நூல்களை தீவிர வாசிப்பாளர்களுக்கும், தொடக்க நிலை வாசிப்பாளர்களுக்கும் பரிந்துரை செய்கிறேன். இன்று நான் ஒரு பெண்ணியவாதியாகவும், பாலின சமத்துவம் பற்றி எழுதவும், பேசவும் எனக்கு சிந்தனை யைத் தூண்டியது பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்கிற நூல். பெண்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் படிக்க வேண்டிய நூல். வாசியுங்கள் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. நீங்களாகவே ஆர்வம் கொண்டு வாசித்தால்தான் சிந்தனை மேம்படும்" என்கிறார் மாலதி மைத்ரி.

"இன்று நேற்று அல்ல... இளைஞர்கள்பற்றிய கவலை எப்போதும் எல்லோருக்கும் இருக்கிறது. இப்போதைய கவலை இளைஞர்களிடத்தில் வாசிப்புப் பழக்கம் இல்லை என்பதுதான். எந்த ஒரு செடியும் அந்தரத்தில் வளர்ந்துவிடுவது இல்லை. அது நடப்பட்ட மண், ஊற்றப்பட்ட நீர், போடப்பட்ட உரம், அதற்கான தட்பவெப்பம் என அனைத்து சங்கதிகளையும் உள்ளடக்கியது அதன் வளர்ச்சி. அப்படி இளைஞர்கள் வாசிக்காமல் இருப்பதற்கான காரணம், அவர்களின் பின்புலம். எந்தச் சூழ்நிலையில் இருந்து அவர்கள் வருகிறார்கள் என்பது முக்கியம்" என உவமையுடன் மனதைப் பண்படுத்தும் சிந்தனையைக் கிளறுகிறார் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்
ச.தமிழ்ச்செல்வன்.

"குடும்பத்தில் யாருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் கிடையாது. அப்படி இருக்க, ஓர் இளைஞனிடத்தில் வாசிப்பை எப்படி எதிர்பார்க்க முடியும். வீட்டில் அனை வரும் டி.வி. பார்ப்பதற்கு இடம் இருக்கிறது. அனைவரும் அமர்ந்து சாப்பிட நேரம் இருக்கிறது. ஆனால், அனைவரும் சேர்ந்து புத்தகம் வாசிக்கவோ, வாசித்ததைப்பற்றி பகிர்ந்துகொள்ளவோ நேரம் ஒதுக்குவது இல்லை.

இன்றைய இளைஞர்கள் அவர்களது துறை சார்ந்த, அவர்களுக்குத் தேவையானவற்றை மட்டும் விழுந்து விழுந்து படிக்கிறார்கள். சமூக அக்கறை சார்ந்த வாசிப்பு என்பது இல்லை.

எதைப் படிக்கிறீர்களோ இல்லையோ, தமிழர் பண்பாடுபற்றி எந்தப் புத்தகம் கிடைத்தாலும் வாசிக்கத் தவறாதீர்கள். தொ.பரமசிவம் எழுதிய 'பண்பாட்டு அசைவுகள்', ஜார்ஜ் புலிட்சர் எழுதி ஆர்.கே.கண்ணன் மொழிபெயர்த்த 'மார்க்சிய மெய்ஞானம்', ஆங்கிலத்தில் ஜேரட் டைமன்ட் என்பவர் மனித குல வரலாற்றைப்பற்றி 'தி ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் தி தேர்ட் சிம்பன்ஸி',

கு.அழகிரிசாமியின் கதைகள் ஆகிய நூல்களைத் தவறாமல் வாசிக்க வேண்டும். தவிர, தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய 'இந்தியன் பிளானிங் இன் கிரைசிஸ்' என்கிற புத்தகம், பொருளாதாரம்பற்றி நிறையத் தகவல்களைக் கற்றுத்தரும்.

தமிழகத்தின் பல இடங்களில் புத்தகக் கண்காட்சி அதிகம் நடந்தாலும், வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம்போன்ற நூல்கள்தான் அதிகம் விற்பனை ஆகின்றன. வாசிப்பின் மூலம் இந்த மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபடுவது அவசியம்" என்கிறார் தமிழ்ச்செல்வன்.

"20 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடம், தேசியம், பொதுவுடைமை என அரசியல் கட்சிகளின் தாக்கங்கள் இல்லாமல் இருந்த இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அந்தத் தாக்கம் இன்று குறைந்த அளவுதான் இருக்கிறது. அதனால் வாசிப்பு என்பதும் குறைந்து இருக்கிறது" என வாசிப்பை அரசியல் பின்னணியுடன் விளக்குகிறார் நீலகண்டன். பல அரிய புத்தகங்களை 'கருப்புப் பிரதிகளா'க வெளியிட்டு வருபவர். "சிறு பத்திரிகைகளின் வளர்ச்சி சமீப காலமாக நல்ல மாற்றத்தைக் கொண்டுவந்து இருக்கிறது. வெகுஜனப் பத்திரிகைகளைப் படிப் பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், சிறு பத்திரிகைகளைப் படிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவது இல்லை.

முன்பெல்லாம் அரசியல் கட்சிகளின் மன்றங்கள், படிப்பகங்கள் ஆகியவை இருந்தன. அங்கு வரும் கட்சிப் பத்திரிகைகளைப் படிக்கத் தொடங்கி, அதன் அடுத்த கட்டமாக நூலகங்களைத் தேடிச் செல்லும் நிலை இருந்தது. அதாவது, அடிப்படையில் இயக்க வாசிப்பை மேற்கொண்டு, அதன் வழியே இலக்கியம், அறிவியல், வரலாறு என வெவ்வேறு தளங்களில் வாசிப்பை விரிவாக்கிக்கொண்டார்கள். அதற்கான சூழ்நிலை இன்று இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா எழுதிய 'சுயமரியாதை சமதர்மம்', அம்பேத்கர் எழுதிய 'சூத்திரர்கள் யார்?', ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய 'வால்காவில் இருந்து கங்கை வரை' ஆகிய நூல்களை வாசிப்பது, சமூகத்தின் மேல் விழுந்து இருக்கும் உங்கள் பார்வையைத் திருத்தும். அரசியல் வரலாற்றில் இருந்து விடுபட்ட சமூகமாக வளர்த்து எடுக்கப்பட்டு இருக்கிற நிலையில், வாசிப்பு மட்டுமே உங்களைச் சிந்திக்கவைக்கும்... சீர்ப்படுத்தும்" என்று தன் கருத்தை முன்வைக்கிறார் நீலகண்டன்.

"ஒரு புத்தகத்தை நீங்கள் தேடிப் போகும் தூரம், பயணம், நேரம், செலவுபோன்ற அசௌகரியங்கள் எல்லாவற்றையும் இணையம் குறைக்கிறது என்பதால், இன்றைய இளைஞர்களிடையே இணைய வாசிப்புக்கு ஆதரவு பெருகுகிறது" என்று தொடங்குகிறார் வலைப்பூ எழுத்தாளர் ஜியோரம் சுந்தர்.

"ஆனாலும், தகவல்களுக்காக, மின்னஞ்சல் செய்வதற்காக, சினிமா பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்காக எனப் பல விஷயங்களுக்காக இணையம் பயன்படுத்துபவர்களைவிட, வாசிப்புக்காக இணையத்தைப் பயன்படுத்துகிறவர்கள் குறைவுதான். தினசரிகள், இதழ்கள், சிறுபத்திரிகைகள் என பலவற்றையும் இணையத்தின் மூலமாகவே வாசிக்கலாம். தவிர, எழுத்தாளர்கள் பலர் தங்களுக்காகத் தனியே ஒரு தளத்தை ஏற்படுத்தி, அதில் தங்கள் நூல்களை வைத்திருக்கிறார்கள். அப்படி யும் வாசிக்கலாம். இணைய வாசிப்பின் இன்னொரு முகமாக, தனிநபர் வலைப்பூக்கள் இருக்கின்றன. அவற்றையும் வாசிக்கலாம்.

நகரத்தில் இருப்பவர்களுக்கு இணையம் கிடைக்கிறது என்பதால், இணைய வாசிப்பு ஓரளவு வளர்ச்சி கண்டு இருக்கிறது. மற்றபடி, கிராமத்தில் இருப்பவர்களுக்கு இணைய வாசிப்பு கடினம்தான். மேலும், 'இம்மீடியசி' என ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, ஓர் எழுத் தாளர் தன் வலைப்பூவில் தன் படைப்பை வெளியிட்டால், அதை உடனுக்குடன் 'சுடச்சுட' வாசித்துவிடலாம். ஏதேனும் ஒரு துறைபற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றால், அதற்கான ஆவணங்களை நீங்கள் எவ்வளவு தூரம் சென்று தேட முடியும்? அதுவே இணையத்தில் சில நொடிகளில் அலசிவிட முடியும். இது இணைய வாசிப்பில் கிடைக்கிற இன்னொரு வசதி. புத்தகம், இணையம் எதுவாக இருந்தாலும் என்ன, வாசிப்பு நிச்சயம் உங்களுக்குப் பல கதவுகளைத் திறந்துவிடும்" என்கிறார் ஜியோரம் சுந்தர்.

'உங்களுக்குள் உறைந்து இருக்கும் மனிதத்தை புத்தக வாசிப்பு மட்டுமே உருகவைக்கும்' என்கிறான் ஃபிரான்ஸ் காஃப்கா. புத்தகங்கள் உங்கள் நண்பர்களாக இருக்கட்டும். புத்தகங்கள் உங்களின் வழிகாட்டியாக இருக்கட்டும். புத்தகங்கள் உங்கள் சிந்தனையைக் கிளறிவிட அனுமதியுங்கள். வாசிப்பு அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போல... ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு அழைத்துச் செல்லும். அது இன்னொன்றுக்கு அழைத்துச் செல்லும். முடிவில்லா அந்த நதியில் மூழ்கி அனுபவங்களை சுவாசியுங்கள். இந்த உலகத்தை நேசியுங்கள்!

1 comment:

  1. Dear comrade, mahindran u have given excellent write-up, I am sure that it gives good energy to young generation like me to develop our reading habit and I will read all the books suggested by u once again my congratulations to you THANKING YOU
    By m.singaravel

    ReplyDelete